பிரான்ஸ் தன்னுடைய நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை வரும் 15-ஆம் திகதிக்கும் அப்பால் நீடிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் தற்போது வரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இன்னும் கொரோனாவின் பாதிப்பு நீடிப்பதால், அரசு சில கடுமையான விதிமுறைகள் எல்லாம் கொண்டு வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 17-ஆம் திகதி முதல் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வர வேண்டும், தேவையில்லாமல் மக்கள் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது வரும் 15-ஆம் திகதிக்கு பின்னரும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவின் விரிவாக்கத்தை அறிவிக்க வரும் திங்கட் கிழமை பேசுவார் என்று எலிசி அரண்மனை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்த அரசு, அதை நீட்டிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இருக்கும் இந்த சூழ்நிலையில், ஊரடங்கு ஏப்ரல் 15-ஆம் திகதிக்கு அப்பால் நீட்டிக்கப்படும் என்று ஜனாதிபதியின் அதிகாரி ஒருவர் AFP -யிடம் கூறியுள்ளார்.
https://twitter.com/Tburgeswatson/status/1247953328459452417
மேலும் வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் புதிய முடிவுகளை முன்வைக்க திங்கள்கிழமை மாலை மேக்ரான் நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றுவார்.
மேக்ரான் இப்போது முதல், கொரோனா தொடர்பான ஆபத்தில் உள்ளவை, பிரான்ஸ், ஐரோப்பிய மற்றும் சர்வதேச அளவில் இருக்கும் தகவல்களை அறிந்து கொண்டு, அதன் பின் திங்கள் அன்று தன்னுடைய முடிவுகளை பிரான்ஸ் மக்கள் முன் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மருத்துவமனையில் கொரோனா வைரஸால் 541 பேர் இறந்துள்ளதாகவும், இதன் மூலம் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,869-ஐ எட்டியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் சுகாதார அதிகாரி ஜெரோம் சாலமன், இப்போது 7,148 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர், இது முந்தைய நாளிலிருந்து 17-ஆக அதிகரித்துள்ளது. ஆனால், சமீபத்திய வாரங்களில் இது குறைந்த அதிகரிப்பு என்று கூறியுள்ளார்.