மட்டக்களப்பிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 4 நாட்களில் 71 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை குறித்த தொழிற்சாலை பூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இன்றைய தினம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 32 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்காலிகமாக பொலிஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு கடந்த 4 நாட்களாக மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 71 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து ஆடைத் தொழிசாலை ஞாயிற்றுக்கிழமை வரை பூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வைத்தியர் குழுவொன்று சென்று அங்கு நிலைமையை ஆராய்ந்த பின்னர் முடிவு எடுக்கப்படும்.
அதேவேளை கோவிட் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் கரடியானாறு வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலைகளில் கட்டில்கள் நிரம்பியுள்ளன.
எனவே அடையாளம் காணப்படும் தொற்றாளர்கள் வேறு மாவட்டத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
புதிதாக வாகரை, வாழைச்சேனை, நாவற்காடு ஆகிய வைத்தியசாலைகளை கோவிட் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது மாவட்டத்தில் தொடர்ந்து அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்ப்பதன் மூலம் கோவிட் தொற்றை தடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.