சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட வீசாவை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கட்டார் ஊடாக கனடா செல்ல முற்பட்ட வேளையில், விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கண்டி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான வர்த்தகர் என கூறப்படுகின்றது.
கட்டார் நாட்டின் டோஹாவிற்கு செல்லவிருந்த QR.669 ரக விமானத்தில் பயணிப்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
அவர் விமான அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக கட்டார் விமான சேவை பிரிவிற்கு வருகை தந்துள்ளார்.
இதன் போது அவர் முன்வைத்த கனடா வீசா தொடர்பில் ஏற்பட்ட சிக்கலுக்கு அமைய அந்த விமான சேவை அதிகாரி உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வீசா பத்திரத்தில் போலித் தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரிடம் விசாரித்த போது தான் இரண்டு லட்சம் ரூபாய் பணம் வழங்கி இந்த கனடா வீசாவை தயாரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.