ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட சில வீதிகளின் சைவப் பெயர்களை மாற்றுவதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளமை வருத்தம் அளிக்கின்றது என அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சைவ மகா சபை ஆட்சேபனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தீவகத்தின், பாரம்பரியம்மிக்க துறைமுக நகரான காவலூர் பண்டைய அழகிய சைவத் தமிழ் கிராமங்களையும் அந்நியராட்சியின் பின் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி கத்தோலிக்க மக்களைக் கொண்ட கிராமங்களையும் கொண்டமைந்த பிரதேசமாகும்.
இந்நிலையில் அங்குள்ள சைவ ஆலய வீதிப் பெயர்கள் சில வருடங்களுக்கு முன்னர் தான்தோன்றித்தனமாக மாற்றப்பட்டு மாற்று மதப் பெயர்ப் பலகைகள் இடப்பட்டுள்ளன.
பதிவேடுகளில் உள்ள பெயர்களுக்கு முரணாக சபையினதோ மக்களினதோ அனுமதியின்றி தவறாக அப்போது செய்யப்பட்ட இந்தப் பெயர் மாற்றங்களை, இப்போது திட்டமிட்டு சட்டபூர்வமாக மாற்ற முனைவது தவறான முன்னுதாரணமாகும்.
ஊர்காவற்றுறையில் சைவர்களும் கத்தோலிக்கர்களும் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சைவ ஆலயத்தின் பெயரைத் தாங்கிய வீதிகளின் பெயர்களை மாற்றம் செய்ய முனைவது மக்களின் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் செயலாகும்.
எனவே, பிழையை சரியாக்கும் தவறான முயற்சியை கைவிடுமாறும் பதிவேடுகளில் தொன்றுதொட்டு வழக்கிலிருந்த உண்மையான, பதிவேடுகளில் உள்ளமை போன்று பெயர்களைக் காட்சிப்படுத்துமாறும் சைவத்தமிழ் மக்கள் சார்பாக சைவ மகா சபையினராகிய நாங்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபையை கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.