கொரோனா வைரஸை கட்டுப்படுத்த யோசனை மற்றும் சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 150-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது.
இதனால் உலக நாடுகளின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகம் முழுவதும் இதுவரை 6000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படாதது மக்களின் அச்சத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதற்கிடையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது வரை இந்த நோய் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 114 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் பீதியில் உள்ளனர். இதனிடையே கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்படி மாநில அரசுகளையும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனைகள் இருந்தால் பகிருங்கள், சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.