தமிழகத்தில் பெற்ற குழந்தையை ஆற்றில் தூக்கி வீசி விட்டு கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளம் தாயாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்தவர் வீரமணி. இவர் மனைவி சத்யா (22). இந்த தம்பதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் 14 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சத்யா தனது குழந்தையை எடுத்துக்கொண்டு கணவரிடம் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதிக்கு வந்துள்ளார். கொடுமுடியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் குழந்தையை தூக்கிக்கொண்டு சத்யா நடந்து வந்துள்ளார்.
அப்போது கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குச்சாலை அருகே உள்ள நொய்யல் ஆற்றுபாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்த போது திடீரென நடுப்பாலத்தில் நின்று தன் கையில் வைத்திருந்த குழந்தை டிஜய்யை நொய்யல் ஆற்றின் தண்ணீரில் தூக்கி வீசியுள்ளார்.
பின்னர் தானும் பிளேடால் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது கையில் ரத்தம் கொட்டியதாலும், பசியால் இருந்ததாலும் மயக்கம் அடைந்து சத்யா கீழே விழுந்தார்.
இதனை பாலத்தின் அருகே உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த பொலிசார் சத்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட குழந்தையை தீயணைப்பு துறையினர் இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் குழந்தையை தேடும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



















