அரசியல் கைதிகள் தொடர்பாக கவனம் செலுத்துவதாக தெரிவிக்கும் சுரேன் ராகவன், உளமார இந்த காரியத்தில் ஈடுபடுபவராக இருந்தால், மாவீரர் நாளை அனுஸ்டிக்கவும் அனுமதியை பெற்றுத்தந்தால் அவரின் செயற்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவளிக்க நான் தயாராக உள்ளேன் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் ஊடகவியலாளரொருவர் சுரேன் ராகவன் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
முன்னாள் வடமாகாண ஆளுநரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் கருத்தொன்றை தெரிவித்துள்ள நிலையில் அரசியல் கைதிகள் என்பது எல்லோருக்கும் சாதாரண விடயம் போல் இருப்பதாக தற்போது தெரிகின்றது.
சுரேன் ராகவன் சுதந்திர கட்சியோடு தற்போதும் இருப்பவர். அக்கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது கிளிநொச்சியில் ஆனந்தசுதாகரனின் விடுதலை சம்பந்தமாக வாக்குறுதி அளித்து சென்றிருந்தார். ஆனால் தற்போது வரைக்கும் அந்த விடுதலையும் நடக்கவில்லை. இதன்போது சுரேன் ராகவன் எங்கிருந்தார்.
அவர் அப்போதே ஜனாதிபதியோடு பேசி தாயை இழந்த அந்த குழந்தைகளின் தந்தையை விடுதலை செய்திருக்க முடியும். தற்போதும் கூட அந்த கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றது.
அமைச்சு பதவிகளையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் நீதி அமைச்சருக்கு, அவர்களை விடுதலை செய்ய அதிகாரமில்லை. ஆகவே அவருக்கு கடிதம் எழுதுவதை விட, ஜனாதிபதியிடம் தற்போது அதிகாரம் குவிந்து கிடக்கின்றது. அந்த அதிகாரத்தினை குவித்து கொடுப்பதில் சுரேன் ராகவனும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே அவர் ஜனாதிபதியுடன் பேசி அவர்களின் விடுதலையை பெற்றுத்தந்தால் நாங்கள் வரவேற்போம்.
அரசியல் நோக்கத்திற்காக நீதி அமைச்சரிடம் நியாயம் கேட்பது அர்த்தமற்றது. எனவே ஜனாதிபதியிடம் கலந்துரையாடி அரசியல் கைதிகளின் விடுதலையை பெற முனைப்புக் காட்ட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்றத்தில் அரசியல் கைதிகள் தொடர்பாக விவாதத்தினை மேற்கொண்டிருக்கின்றது. அப்போது இதே அரசாங்கத்தில் உள்ளவர்கள் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையென்றே தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அதிகாரமில்லாத நீதி அமைச்சரிடம் சுரேன் ராகவன் எமது இளைஞர்களின் விடுதலை தொடர்பில் கேட்பதை விட ஜனாதிபதியிடம் பேசி விடுதலையை பெற்றுத் தந்தால் நாங்களும் எங்கள் மக்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதோடு நன்றி சொல்ல கடமைப்படுவோம்.
அதனை விடுத்து எமது அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்போகின்றேன் என பாசாங்கு காட்டக்கூடாது என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எமது அரசியல் கைதிகள் தொடர்பாக சுரேன் ராகவன் உளமார நினைத்திருந்தால் நல்ல விடயமாக இருக்கும். அத்துடன் ஒரு கோரிக்கையை சுரேன் ராகவனிடம் முன்வைக்க விரும்புகின்றேன். அதாவது, அரசியல் கைதிகள் எமது விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு தியாகத்தினை செய்தே இன்று சிறையில் வாடுகின்றனர்.
அந்தவகையில் தமது உயிரை இந்த மண்ணுக்காக தியாகம் செய்த போராளிகளது நினைவு நாள் நவம்பர் 27 ஆம் திகதி வரவுள்ளது. எனவே எமது மக்கள் தமது உளக்கிடக்கைகளையும் சோகத்தினையும் வெளிப்படுத்தும் நாளினை அனுஸ்டிப்பதற்கான அனுமதியை பெற்றுத்தந்தால் நாங்கள் உங்களுக்கு பின்னால் அணி திரள தயாராகவுள்ளோம்.
அத்துடன் இவ்விரு செயற்பாட்டையும் ஜனாதிபதியுடன் பேசி செயற்படுத்தி தந்தால் சுரேன் ராகவனின் அனைத்து செயற்பாடுகளுக்கும் எனது ஆதரவை வழங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்.




















