வலிகாமம் வடக்கு பிரதேச சபை கூட்டத்தில் விகாரை என்ற சொல்லை பயன் படுத்துவதற்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் பின்னடித்தார். அத்துடன், தமிழ் மக்களின் பூர்வீக நிலமான வலிவடக்கு பிரதேசத்தில் புதிய விகாரைகள் கட்டக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் கண்டுகொள்ளாமல் விட்டார்.
வலி.வடக்க பிரதேசசபையின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (29) நடைபெற்றது. இராணுவத்தால் விடுவிக்கப்படாத பிரதேசங்கள் தொடர்பாக அதில் பேசப்பட்டது. அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், விடுவிக்கப்படாத பல இடங்களில் உள்ள விகாரைகள் அனைத்தும் அகற்றப்படவேண்டும். அந்த பிரதேசங்களில் புதிதாக விகாரைகள் அமைக்கப்பட கூடாது என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அங்கஜன், விகாரை என்ற சொற்பதத்தை தவிர்த்து கட்டுமானங்கள் என்ற சொல்லை பாவியுங்கள் என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், விகாரை என்ற சொற்பதத்தை பாவிப்பதால் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சரியான பதில் எதனையும் வழங்காமல் அங்கஜன் மழுப்பினார்.
இராணுவத்தால்உருவாக்கப்பட்ட கட்டுமானங்களை இடித்தழித்தால் சிங்கள மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். விகாரைகள் என்ற பெயரில் உருவாகும் கட்டுமானங்களை அழித்தால் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சி உருவாகும். அதனால் புதிதாக விகாரைகள் அமையாமல் தடுத்து நிறுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வலியுறுத்தினார். இதன்று அங்கஜன் ஆக்கபூர்வமாக பதில் அளிக்கவில்லை.
தையிட்டியிலுள்ள தனியார் காணியில் திஸ்ஸ விகாரையென்ற பெயரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென செ.கஜேந்திரன் வலியுறுத்தினார்.
விகாரைகள் அகற்றப்பட வேண்டும்தான் என கூறிய அங்கஜன், ஆனால் அதை தீர்மானமாக நிறைவேற்றாமல் இழுத்தடித்தார்.
சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய விகாரைகள் அமைக்கப்பட கூடாது என என தீர்மானமாக நிறைவேற்ற ஏன் அச்சப்படுகிறீர்கள். எமக்கு தேவை இறுக்கமான தீர்மானங்களே என கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அங்கஜன், இந்த சபையில் அரசியல் செய்யாதீர்கள். உங்களை போன்ற எண்ணம்தான் என்னிடமும் உள்ளது. ஆனால், எம்மை நாமே இனவாதிகளாக காண்பிக்கக் கூடாது. இந்த விடயம் விரைவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
விகாரை விவகாரம் பெரும் அமளிதுமளியில் முடிந்தாலும், வலிவடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக- தனியார் காணகளில் அடாத்தாக விகாரை அமைப்பது குறித்து எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.