முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியிலும் மீனவர் மத்தியிலும் நிலவிவந்த பிரச்சனைகள் தொடர்பாக நேரடியாக கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் மூன்று நாள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நிரலை ஆரம்பித்துள்ளனர்.
அதன் ஆரம்பமாக 26.02.21 நேற்று முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் மீனவர்கள், மீனவ சங்கங்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
அதன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு வாழ் மக்களின் வாழ்வாதாரத்தினை ஒன்றரை இரண்டு ஆண்டுகளுக்குள் பாதுகாத்து பலப்படுத்தி உறுதி படுத்துவோம் என்றும், வடக்கு கிழக்கில் நிர் வேளாண்மையினை வேகமாக செய்வதற்கு உத்தேசித்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கடற்தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தினை பலப்படுத்த உத்தேசித்துள்ளேன். இந்திய மீனவர்களின் அத்துமீறல் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மீனவர்கள் பிரச்சனை தீர்த்து தராவிட்டால் போராட்டம் நடத்துவோம் அமைச்சரின் வடமாகாண நடவடிக்கையினை முடக்குவோம் என்று வடமாகாண மீனவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் நான் பொறுமை பொறுமை என்று கூறிவருகின்றேன்.
ஆனாலும் மீனவர்களின் கோரிக்கை நியாயமானது அதனைத் தீர்க்க முற்படுவேன். பத்தாயிரம் கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவிற்கு போய் அங்குள்ள கடற்தொழிலாளர்களுடனும் ஆட்சியாளர்களுடனும் பேச்சு நடத்துவதாக கூறியிருந்தேன்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இங்கிருந்து கதைப்பதை விட பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவிற்கு சென்று அந்த பிரச்சனையினை தீர்ப்பதற்கு யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.