மனிதனை மூச்சுத்திணற வைத்துக் கொல்லும் டெல்டா கோவிட் வைரஸ், இலங்கையில் விமான நிலையங்கள் மூலமாக மட்டுமன்றி வட பகுதியில் இந்திய மீனவர்கள் ஊடாகவும் மேலும் பரவக்கூடும் என தொற்று நோய்கள் மற்றும் கோவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறல் வடபகுதியில் உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவில் பெருந்தொற்றாக உருவெடுத்த டெல்டா கோவிட் வைரஸ் இன்று இலங்கை உள்ளிட்ட 85 நாடுகளுக்குப் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தொற்றை ஆரம்பத்திலேயே நாம் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் இலங்கை முழுவதும் இந்த வைரஸ் பரவக்கூடும்.
அப்படியான நிலைமை ஏற்பட்டால் நாளாந்தம் ஆயிரக்கணக்காணக்கான உயிரிழப்புகள் இங்கு பதிவாகும். இந்தியா போன்று இலங்கையிலும் பிணங்கள் தான் குவியும்.
பேராபத்துமிக்க இந்த டெல்டா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கை மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. வடபகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. அவர்கள் ஊடாகவும் டெல்டா வைரஸ் இலங்கையில் மேலும் பரவக்கூடும்.
எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறல் வடபகுதியில் உடன் நிறுத்தப்பட வேண்டும். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்களுடன் தொடர்பு வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.