புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
7 துணை திட்டங்கள் உள்ளடங்கிய இந்த திட்டத்தை 2025-2026 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தில் புலம்பெயர்ந்து, நாடு திரும்பிய இலங்கை தமிழர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த காஷ்மீரிகள், 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிகள் பொதுவான திட்டத்தில் மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், இதற்காக ஆயிரத்து 452 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 7 துணை திட்டங்கள் உள்ளடங்கிய இந்த திட்டத்தை நடப்பு 2021-2022 ஆம் ஆண்டு தொடக்கம் 2025-2026 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதன்படி, புலம்பெயர்ந்தோர் ஒரு நியாயமான வருமானம் ஈட்டவும், பொது பொருளாதார நடவடிக்கைகளில் அவர்களை இணைத்துக்கொள்ளவும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் உதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.