யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது . சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கட்டைக்காடு ராணுவ முகாமிற்கு முன்னால் காணப்பட்ட நூற்றுக்கணக்கான பனை மரங்களே இவ்வாறு திடீரென தீப்பற்றி எரிந்தது.
இராணுவத்தினர் தீயை அணைப்பதற்காக, தீயணைப்பு வாகனத்தை வரவழைத்ததுடன் மருதங்கேணி இராணுவ முகாமில் இருந்தும் தீயை அணைப்பதற்காக 200 இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக கட்டைக்காடு இராணுவ அதிகாரி கூறுகையில், இராணுவ முகாமுக்கு முன்னால் காணப்படும் இந்த நூற்றுக்கணக்கான பனைகளுக்கு தீவைப்பது இது முதல் முறை அல்ல இதற்கு முன்பும் பல தடவைகள் இவ்வாறு தீ வைத்து அழித்துள்ளார்கள்.
பொதுமக்கள் வந்து இங்கே மட்டைகளை வெட்டுவது, பனம் பழம் பொறுக்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.அவர்களை ஒருபோதும் இராணுவத்தினர் தடுத்ததில்லை.
ஆனாலும் இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். அருகில் காணப்படும் மதுபான சாலையில் மது அருந்திவிட்டு சென்றவர்களே இவ்வாறு பனைகளுக்கு தீ வைத்திருக்கலாம் எனவும் இரானுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தின் கற்பக தரு என அழைக்கப்படும் பனை மரங்கள் விசமிகளால் தீவைப்பட்ட நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைமரங்கள் தீயில் கருகியுள்ளமை வேதனையை ஏற்படுத்தியுள்ளது.



















