அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு 1904 எனும் அவசர இலக்கத்தின் ஊடாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90 சதவீதமானவை தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
அனர்த்த நிலைமை
அனர்த்த நிலைமை காரணமாக நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான 343 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 156 நிலையங்கள் செயலிழந்ததாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக இதன் காரணமாக கண்டி மாவட்டத்தின் நீர் வழங்கல் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், நீர் வழங்கல் ஊழியர்களின் அர்ப்பணிப்பு காரணமாக, சேதமடைந்த நீர் வழங்கல் அமைப்புகளில் சுமார் 90 சதவீதத்தை வழமைக்கு கொண்டு வர முடிந்துள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.



















