யாழில் இரண்டு உள்ளூராட்சிசபைகளை இழந்தமை எதிர்பாராத நிகழ்வு. மணிவண்ணன் இந்த விடயத்தில் நேர்மையாக செயற்படவில்லையென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.
யாழ் மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபை என்பவற்றில் மணிவண்ணன் குழு ஆட்சியமைத்துள்ளது. நேற்று (20) இரண்டு சபைகளிற்கும் வாக்கெடுப்பு நடந்தது.
இது குறித்து தமிழ் அரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவை தொடர்பு கொண்டு தமிழ்பக்கம் வினவியது.
“இது எதிர்பாராத நிகழ்வு. ஈபி.டி.பியும், மணிவண்ணன் தரப்பும் திடீரென இணைந்து ஆட்சியமைத்துள்ளனர். எமது உறுப்பினர் ஒருவரும் அதற்கு வாய்ப்பாக நடுநிலை வகித்துள்ளார். அனைத்து உறுப்பினர்களிடமும் கருத்து கேட்டோம். இவர்கள் அதில் பேசவில்லை.
எமக்கு ஆதரவளிக்குமாறு மணிவண்ணனை நான் நேரில் கேட்டிருந்தேன். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி வாக்களிக்க முடியாதென எமக்கு சொல்லியிருந்தார். இப்பொழுது கட்சிக்கு தெரியாமல் போட்டியே இட்டுள்ளார். இது தொடர்பில் கஜேந்திரகுமாரும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
புதிய உள்ளூராட்சி தேர்தல் முறையினால் எந்த கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமைதான் உருவாகியது. இந்த நிலைமை இப்போதல்ல, ஆட்சியமைத்த போதே நிலவியது. பல சபைகளில் சமான வாக்கு கிடைத்து, நாணயச்சுழற்சியிலும் வென்றிருந்ததோம். அப்பொழுது பிரிந்து செயற்பட்ட ஈ.பி.டி.பியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு தரப்பும் இணங்கி செயற்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த பின்னரும் இப்படியான நிலைமையொன்று இருந்தது. பின்னர், அவர்கள் தனித்தனியாக வாக்களித்தனர்.
யாழ் மாநகரசபையை இப்பொழுதுதான் முதன்முறையாக நாம் இழக்கவில்லை. தந்தை செல்வா காலத்திலேயே அல்பிரட் துரையப்பா அங்கு வெற்றியடைந்திருக்கிறார். ஆகவே, இது இப்பொழுதுதான் நடந்ததல்ல.
ஆனாலும், இது எதிர்பாராதது. நாம் எமது மாநகரசபை உறுப்பினர்களை இன்று (31) கலந்துரையாடலிற்கு அழைத்துள்ளோம். அதில் ஒருவர்தான் கட்சிக்கு எதிராக செயற்பட்டார். அவர் வாக்களித்திருந்தால் சமனிலை அடைந்து, நாணயச்சுழற்சியில் வெற்றியடைந்திருக்கவும் வாய்ப்புண்டு. அவர் இன்றைய கலந்துரையாடலிற்கு வந்தால், அவரிடம் விளக்கம் கேட்போம். அல்லது எழுத்து மூலம் கேட்டு, அடுத்த கட்ட நடவடிக்கையெடுப்போம்“ என்றார்.