தேர்தல் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இல்லாமல் இருப்பதாக நேற்று ஜனாதிபதி கூறிய கருத்துக்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பதிலளித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர், முடிந்தால் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாக தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நிலையில் தேர்தல்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தனது கட்சியை ஒரு ஆசனத்திற்கு குறைத்த ஒரு தலைவரிடமிருந்து இவ்வாறான கருத்து வெளிவருவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தேர்தல் நடத்தப்பட்டால் அவர்களுக்கு ஏற்படும் கதி என்னவென்பதை நன்குணர்ந்து வைத்துள்ளனர். நாடாமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நாட்டின் அதிகாரத்தில் 50 வீதம் கூட இல்லை என ஜனாதிபதி எவ்வாறு கூறுவார்? உண்மை நிலவரத்தை புரிந்து கொள்வதற்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். அதற்கு தயங்க வேண்டாம்.
மேலும் அடுத்த வருடம் நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முடியுமானால் இவ்வருடம் நடத்துமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுக்கிறேன். இதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பை நல்கும் என்று தெரிவித்துள்ளார்.