ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதித்து நடக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதை நடைமுறைப்படுத்த வேண்டும், இந்த கடமையிலிருந்து அரசு தப்ப முடியாது எனவும் கூறியுள்ளார்.
இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி அதனை அவமதிக்கும் வகையில் ராஜபக்ச அரசு வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசால் ஐ.நாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் பலவிதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வாக்குறுதிகளை ராஜபக்ச அரசு நிறைவேற்றியே தீர வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
பொறுப்புக்கூறல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையால் கால அவகாசம் வழங்கப்பட்டும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
அதை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த புதிய அரசு தயாராக இல்லை என்றால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமை நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் இந்த கருமத்தை எவ்விதமாக செயற்படுத்தலாம் என்று தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
எம்மைக் கடந்த வாரம் சந்தித்த பிரிட்டன், அமெரிக்கா நாடுகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்துள்ளோம்.
இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தைச் செயற்படுத்தும் வகையிலான பேச்சுக்களை சர்வதேச நாடுகளுடன் தொடர்ந்து நாம் நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.