ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டாலும் தங்களுக்கு பெரிய சவாலாக அமைந்துவிடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கடந்த 05 வருட ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமாக நடத்தியதால் அதன் விளைவாக மீண்டும் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ‘ஐக்கிய தேசியக் கட்சி எமக்கு கடந்த வருடங்களாக சவாலாக அமையவில்லை. இனியும் அமையப்போவதில்லை.
2010ம் ஆண்டில் பீல்ட் மார்ஷல் பொன்சேகா ரூபத்திலும், 2015ம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேனவின் ரூபத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்து இறுதியில் கைப்பற்றிய போதிலும் கடந்த 05 வருட ஆட்சி மிகவும் பலவீனமான முறையில் செய்தது.
அந்த பலவீனமான ஆட்சி முறையினால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைகின்ற அனைத்து தரப்பினருடைய ஆட்சியும் பலவீனமானதே என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்தக் கட்சி எமக்கு எந்த விதத்திலும் சவாலாகிவிடாது.
இரண்டாவது விடயம் என்னவென்றால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உருவெடுத்துள்ள நெருக்கடி அவர்களே தீர்த்துக்கொள்ள வேண்டும். எமக்கு மக்களுடன்தான் கொடுக்கல் வாங்கல் உள்ளது.
இதயம், ஆழி, சுகாதார குடும்பநல உத்தியோகத்தர் என்ற பல ரூபங்களில் ஐக்கிய தேசியக் கட்சி சின்னங்கள் எடுத்து வந்தாலும் அவற்றை மக்கள் நிராகரித்துவிடுவார்கள்” என்று தெரிவித்தார்.