மத்திய வங்கி மோசடிக்காரர்களின் முகவர்களாகவே ஆட்சியாளர்கள் இருந்து வந்திருக்கின்றனர். அதனால் அர்ஜுன மகேந்திரனுக்கோ அல்லது அஜித் நிவாட் கப்ராலுக்கோ ஆட்சியாளர்களினால் தண்டனை வழங்கப்படமாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற பிணைமுறி தொடர்பான மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியினர் அர்ஜுன் மகேந்திரனைப் பாதுகாக்கும் வகையிலும், மொட்டுக் கட்சியினர் அஜித் நிவாட் கப்ராலைப் பாதுகாக்கும் வகையிலுமே நாடாளுமன்றத்தில் செயற்படுகின்றனர்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருக்கமானவராக அர்ஜுன மகேந்திரன் இருந்தார். அதனால் அர்ஜுன் மகேந்திரன் அவரது உறவினர்களுக்கு மத்திய வங்கி பிணைமுறிகளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்தார்.
அதேபோன்று மஹிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான அஜித் நிவாட் கப்ரால் அவரது சொந்தக்காரர்களை மத்திய வங்கி பிணைமுறி வழங்கும் நிறுவனங்களுக்கு நியமித்து பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்டார்.
இந்த மோசடிகளை மேற்கொண்டிருப்பது மோசடி மிக்க வலயல் ஒன்றினாலாகும். இவர்கள் அனைவரும் ஒரே உறவினர்களாகும். இந்த மோசடி வலயலுடன் தொடர்புபட்டவர்களே எமது நாட்டை காலகாலமாக ஆட்சி செய்து வருகின்றனர்.
அதனால் இந்த மோசடிக்காரர்கள் வலயல் எப்படி தனவந்தர்களாக மாறினார்கள் எனத் தேடிப்பார்த்தால், எமது நாடு எவ்வாறு வறுமை நிலைக்குச் சென்றது என்பதை அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.



















