சம்பளமோ, சலுகைகளோ இன்றி நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் கருத்து நடைமுறை சாத்தியமற்றது என உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது நாடாளுமன்றத்துக்கும் கொரோனாவை கொண்டு வருவதாக முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார். அதில் மேலும்,
கொரோனாவை காரணம் காட்டி மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவதன் மூலம் இன்னுமின்னும் இப்பிரச்சினை உக்கிரம் அடையுமே தவிர கொரோனாவை கட்டுப்படுத்துவது சிரமமாகும்.
இன்றைய நாட்டு நிலையின் படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தாலும் ஓரளவு நிறைவேற்று அதிகாரம் கொண்ட, நிர்வாக திறமை கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் அரசியல் அனுபவமும், நாட்டின் மீது அக்கறையும் கொண்ட பிரதமரும் இருப்பதால் பாரிய கொரோனா ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதை காண்கிறோம்.
சம்பளமோ சலுகைகளோ தேவையில்லை மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுங்கள் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளமை கூட நடைமுறை சாத்தியமற்றதாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் தேவையில்லை என இப்போது சொல்லி மன்றத்தை கூட்டினாலும் நாளை யாராவது ஒரு உறுப்பினர் சம்பளத்தை கோரி நீதிமன்றம் போனால் மக்களின் பணத்தில் இருந்தே சம்பளம் கொடுக்க வேண்டி வரும்.
அது மட்டுமல்லாது நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் 225 பேர். ஆனால் அவர்களின் பாதுகாப்பு பிரிவு, வாகன சாரதி, நாடாளுமன்ற ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் என ஆயிரக்கணக்கில் உள்ளனர். இவர்கள் அனைவரும் நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் பணி புரிய வேண்டும்.
இது கொரோனா விடயத்தில் தனித்திருப்பது என்பதை கேலிக்குரியதாக மாற்றிவிடும்.
மட்டுமல்லாது நாடாளுமன்றம் கூட்டியபின் யாராவது ஒரு உறுப்பினருக்கு கொரோனா ஏற்பட்டால் இதற்குரிய முழு பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என்ற கூக்குரல்களும் ஒலிக்கலாம்.
இன்றிருக்கும் நிலையில் மக்களுக்கு ஜனாதிபதி மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை உள்ளது.
அரசில் உள்ள சிலர் சில தவறுகளை செய்கின்ற போதும் இன்னமும் அரசாங்கம் கொரோனாவை ஒழிப்பதில் உறுதியாக செயற்படுகிறது.
ஆகவே நாடாளுமன்றத்தை கூட்டுவதை விட பிரதமர் தலைமையில் ஆளும் கட்சிக்கு ஆதாரவான கட்சிகள், எதிர்க்கட்சி தலைவர்களை உறுப்பினராக கொண்ட ஒரு சபையை கொரோனா நடவடிக்கை கண்கானிப்பு சபையாக ஏற்படுத்தி அவர்களுக்கிடையிலான சந்திப்பை வீடியோ மாநாட்டு முறை மூலம் நடத்தலாம் என்ற ஆலோசனையை உலமா கட்சி முன் வைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.