காஞ்சிபுரத்தில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை இடி தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் பெய்தது.
காஞ்சீபுரம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை கருமேகம் சூழ்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
காஞ்சீபுரம் அடுத்த கூரம் கிராமம் அரசமரத்தெருவில் வசிப்பவர் பெருமாள். இவரது மகன் கார்த்தி (25), பாலுச்செட்டிசத்திரம் பஜாரில் இருசக்கர வாகனங்களுக்காக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 20 நாட்கள் தான் ஆகிறது.
கார்த்தி இன்று காலை 7 மணியளவில் ஏரிக்கரையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வானத்தில் கருமேகம் சூழ்ந்து இடி தாக்கியது. இதையடுத்து கார்த்தி அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். உடனடியாக கிராமத்தினர் அவரை ஆம்புலன்ஸில் காஞ்சீபுரம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கார்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பொலிசார் கார்த்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார்த்தி இறந்த செய்தி கேட்டதும் புதுமணப்பெண், அவரது குடும்பத்தினர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.