கொரோனா இடர்கால நிவாரண நிதி கொடுப்பனவாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்காக, மலையகத்தில் பாலியல் ரீதியான இலஞ்சம் கோரப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பதுளையில் வைத்து நேற்று (மே-23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் இக்குற்றாச்சாடடை முன்வைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையகத்தில் 5,000 ரூபா நிவாரணம் வழங்களில் இழுத்தடிப்புகளும், கழுத்தறுப்புகளும் தொடர்கிறது. இந்த நிவாரண பணம் தம்மாலேயே வழங்கப்படுவதாக ஒரு சில மலையக அரசியல்வாதிகள் தம்பட்டம் அடித்து வருகின்றனர்.
நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பபடிவங்கள் 25 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் ஒரு சில இடங்களில் 5,000 ரூபா கொடுப்பனவுக்காக பாலியல் ரீதியான இலஞ்சம் கோரப்படுகிறது.
இவ்வாறான சூழலில் நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் பிரதேச அரசியல் வாதிகளை ஈடுபடுத்த வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளதை வரவேற்பதாகவும் கூறியிருந்த அரவிந்த குமார், இனியாவது எந்தவித பாகுபாடுகளும் இன்றி பெருந்தோட்ட மக்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என எதிர்பார்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.