மலையக மக்களுக்கு ஜே.ஆர். ஜயவர்தனவே வாக்குரிமை வழங்கினார். அதன்பின்னர் எஞ்சியிருந்தவர்களுக்கு நான் வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தேன். எனவே, மலையக மக்களிடம் வாக்கு கேட்கும் உரிமை எமக்கு உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா, சினிசிட்டா மண்டபத்தில் இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூடடத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
1972 ஆம் ஆண்டு முதல் நுவரெலியாவில் நான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றேன். பெருந்தோட்ட மக்களுக்காக சேவையாற்றுவதற்கு எனக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. ஜே.ஆர். ஜயவர்தன, காமினி திஸாநாயக்க போன்றோர் பல சேவைகளை செய்துள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியின்கீழ் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சௌமியமூர்த்தி தொண்டமானும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
ரணசிங்க பிரேமதாசவும் நுவரெலியாவுக்கு வீடுகளை வழங்கினார். நான் கல்வி அமைச்சராக இருந்தபோது, பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு கட்டடங்களை நிர்மாணித்துக் கொடுத்தேன். ஆசிரியர்களையும் வழங்கினேன். ஶ்ரீபாத கல்வியியல் கல்லூரியையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.
நான் பிரதமரான பின்னர் பெருந்தோட்ட மக்களுக்கு காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னர் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுவிட்டது. 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆறுமுகன் தொண்டமான் எம்முடன் இருந்தார்.
பெருந்தோட்டப் பகுதியில் இருந்த பலருக்கு வாக்கு உரிமை இருக்கவில்லை. தோட்ட முகாமையாளரின் அனுமதி தேவைப்பட்டது. ஒரு சத்தியக்கடதாசி ஊடாக இந்நிலைமையை மாற்றியமைத்தேன். இதனால் சுமார் 2, 3 லட்சம் பேருக்கு வாக்குரிமை கிடைத்தது.
ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் நிறைய பேருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. குடியுரிமையும் வழங்கப்பட்டது. எஞ்சியிருந்தவர்களுக்கு நான் வழங்கினேன். 2015 இல் பெருந்தோட்டத்துறையை கட்டியெழுப்புவதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதமர் மோடியை ஹட்டனுக்கு அழைத்துவந்தேன்.
வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டன. 25 தமிழ்ப் பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வுகள்கூட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. கம்பெரலிய திட்டம் ஊடாகவும் அபிவிருத்திகள் நடந்தன. அதேபோல சிங்கள கிராமங்களும் மேம்படுத்தப்பட்டன.
அதேவேளை, தற்போது கொரோனா வைரஸ் பரவிவருகின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பரிசோதனைகளையும் நடத்தவில்லை. தோட்டப் பகுதிகளில் கொரோனா பரவினால் என்ன நடக்கும். எனவே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பரிசோதனைகள் அதிகரிக்கப்படவேண்டும். நாளொன்றுக்கு 5 ஆயிரம் பரிசோதனைகளையாவது நடத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.



















