போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டில் இருந்து இல்லாமலாக்கியே தீருவோம். அதற்கு விசேட படையணி தேவையாக இருந்தால் அதனையும் மேற்கொள்வோம் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஐந்து வீதமானவர்கள் போதைக்கு அடிமையாகியிருக்கின்றனர் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
களுத்துறை வியன்கல்ல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
2015ஆம் ஆண்டு எமது அரசாங்கம் அதிகாரத்தில் இருந்து செல்லும்போது இலங்கையில் போதைப்பொருள் தொடர்பில் 6 ஆயிரத்தி 600 வழக்குகள் இருந்தன. 2016ஆம் ஆண்டு 800 வழக்குகள் இருந்தன. 2017ஆகும்போது 11ஆயிரம் வரை அதிகரித்திருந்தன.
2018ஆம் அண்டில் 12ஆயிரமாகி இருக்கின்றது. கடந்த வருடம் 16ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த வருடம் மாத்திரம் இதுவரை போதைப்பொருள் சம்பந்தமான வழக்குகள் 13ஆயிரம் வரை பதிவாகி இருக்கின்றன.
அதனால் இந்த நிலைமையில் இருந்து நாட்டை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். அரசாங்கம் மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதுபோல், நீண்டகாலத்துக்கு நாடு முன்னேறிச்செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அச்சம், சந்தேகம் இல்லாத பாதுகாப்பான சூழலுடன் நாட்டை முன்னேற்றவேண்டும் என்ற தேவையே ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அதற்காக எங்களுடன் கைகோர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் இந்த நாட்டில் இருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாமலாக்கியே தீருவோம். நாட்டு மக்கள் அனைவரையும் அதிலிருந்து பாதுகாப்போம். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ஆரம்பம் முதல் இறுதிவரையான தகவல்களை தேடுவோம்.
அதற்கு விசேட படையணி ஒன்று தேவையாக இருந்தால் அதனையும் நாங்கள் மேற்கொள்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



















