கடந்த 8 மாதங்களுக்குப்பின் விசா கட்டுப்பாடுகளை இந்திய மத்திய அரசு தளர்த்தியுள்ளது. மின்னணு, சுற்றுலா, மற்றும் மருத்துவ விசாக்கள் தவிர்த்து அனைத்து விசாக்கள் மூலம் இந்திாயவுக்குள் வெளிநாட்டினர் வரவும், செல்லவும் அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியவுடன் கடந்த பிப்ரவரி மாதம் சர்வதேச விமானப் போக்குவரத்தை மத்திய அ ரசு நிறுத்தியது. வெளிநாட்டு பயணிகளுக்கு விசா வழங்கவும், வழங்கிய விசாக்களையும் ரத்து செய்தது.
இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக வர்த்தக ரீதியில் சர்வதேச விமானப்போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இருப்பினும் வந்தேபாரத் மிஷன் மூலம் விமானப்போக்குவரத்து நடந்து வந்தது.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியத் தொடர்ந்து விசாக் கட்டுப்பாடுகளில் தளர்வை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவை பூர்வீமாகக் கொண்டிருக்கும் இந்தியர்கள், பிஐஓ கார்டு வைத்திருப்போர், வெளிநாட்டினர் அனைவரும் எந்த காரணத்துக்காகவும் இந்தியாவுக்குள் இனிமேல் வரலாம். ஆனால், சுற்றுலா விசா மூலம் மட்டும் வருவதற்கு அனுமதியில்லை.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறையத் தொடங்கியதையடுத்து, விசாக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி வெளிநாட்டினர், இந்தியர்கள் இந்தியாவுக்குள் வரவோ அல்லது செல்லவோ கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.
ஆனால் மின்னணு விசா, மருத்துவ விசா, சுற்றுலா விசாக்களில் மட்டும் வெளிநாட்டினர், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்குள் வர அனுமதியில்லை. மற்றவகையில் அனைத்து விசாக்கள் மீதான கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்படுகின்றன.
விசாக்களின் தேதி காலாவதியாக நேர்ந்தால், குறிப்பிட்ட நபர்கள் இந்தியத் தூதரகத்தில் அளித்து புதிப்பித்துக் கொள்ளலாம். வெளிநாட்டினர் மருத்துவ சிகிச்சைக்காக வருவோர் புதிதாக விண்ணபிக்கவேண்டும். தங்களுடன் வருவோருக்கும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த உத்தரவு மூலம் வெளிநாட்டினர் இனிமேல் இந்தியாவுக்கு வர்த்தகம், தொழில், மாநாடு, அலுவல் பயணம், படிப்பு, வேலைவாய்ப்பு, ஆய்வுப்பணிகள், மருத்துவக் காரணங்களுக்காக வந்து செல்லலாம். மேலும், ஓசிஐ மற்றும் பிஐஓ அட்டை வைத்திருப்பவர்கள், வெளிநாட்டினர் இந்தியாவுக்கு சுற்றுலா விசா தவிர எந்த பணிக்கு வேண்டுமானாலும் விமானம், கப்பல் வழி மூலம் வந்து செல்லலாம்.
இந்திய அரசு சார்பில் நடத்தப்படும் வந்தே பாரத் மிஷன் திட்டம் மூலம் பயணிகள் இந்தியாவுக்குள் வந்து செல்லாம். ஆனால், அதில் பயணிக்கும் போது கடுமையான விதிமுறைகள், கரோனா பாதுகாப்பு வழிமுறைளைப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.