அமெரிக்காவில் ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கிய ஆண்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்து உள்ளது என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு ஆகியவை அதிகரித்து அந்நாடு முதல் இடத்தில் உள்ளது. இதனால், தொற்றை குறைக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன் எதிரொலியாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அமெரிக்காவில் கொரோனா தொற்று மற்றும் அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஆகியவை பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதில் 18 வயதுக்கு மேற்பட்ட 2 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் ஆண்கள் 2 மணிநேரத்திற்குள் 5 அல்லது அதற்கு மேற்பட்ட முறை மதுபானம் குடிக்கின்றனர். பெண்கள் 4 அல்லது அதற்கு மேற்பட்ட முறை மதுபானம் குடிக்கின்றனர்.
ஒவ்வொரு வார ஊரடங்கின்பொழுது 19 சதவீதம் அளவுக்கு கூடுதலாக மதுபானம் குடிக்கும் விகிதம் அதிகரித்து உள்ளது. அதிகம் குடிக்காதவர்களை விட குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இரு மடங்கு மதுபானம் குடிக்கின்றனர். மனஅழுத்தம் உள்ளவர்கள் அல்லது குடிப்பழக்கம் ஒரு வியாதியாக மாறியவர்களில் இது அதிகம் காணப்படுகிறது.
இதனால், தனிமைப்படுத்தலில் உள்ளவர்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்து சுகாதார விளைவுகள் ஏற்பட கூடிய சாத்தியம் உள்ளது என எச்சரிக்கை விடுக்கும் ஆய்வாளர்கள், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


















