தமிழகத்தில் கணவனும், மனைவியும் வீட்டுக்குள் சடலமாக கிடந்ததை பார்த்த அவர் உறவினர் அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.
திருமுல்லைவாயலை அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (38). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சசிகலா (28). இவர்களுக்கு விகாஷ் (10) என்ற மகனும், ரேஷ்மா (6) என்ற மகளும் உள்ளனர்.
மகன், மகள் இருவரும் விழுப்புரத்தில் உள்ள சசிகலாவின் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். கணவன்- மனைவி மட்டும் வீட்டில் இருந்தனர். நேற்று மதியம் விஜயகுமாரும், அவரது மனைவியும் விழுப்புரத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்ல இருந்தனர்.
இதற்காக சசிகலா, வீட்டில் உள்ள குளியல் அறையில், குளிப்பதற்காக வெந்நீர் போடுவதற்காக வாளியில் தண்ணீரை ஊற்றி அதில் மின்சார ஹீட்டரை போட்டு சுவிட்ச்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.
இதனால் அவர் அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த விஜயகுமார், மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் கணவன்-மனைவி இருவரும் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.
இதற்கிடையில் சசிகலாவின் தம்பி சரவண வடிவேலு (26) நீண்டநேரம் போன் செய்தும் எடுக்காததால் அக்காவை பார்க்க வீட்டுக்கு வந்தார். ஆனால் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.
நீண்டநேரம் தட்டியும் கதவை திறக்காததால் சந்தேகத்தின்பேரில் பின்பக்க வழியாக வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது குளியல் அறையில் சசிகலாவும், விஜயகுமாரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் தான் நடந்த உண்மையை அவர் புரிந்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பொலிசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.