தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து 6 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை இடைநிறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக, இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது யாழ் நீதவான் நீதிமன்றம்.
யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் ஏனைய 3 மாநகரசபை உறுப்பினர்கள், சாவகச்சேரி நபரசபையின் 2 உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்க அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நடவடிக்கையெடுத்தது.
இது தொடர்பில் தெரிவத்தாட்சி அலுவலர்களிற்கு கட்சி தலைவர், செயலாளரின் கையொப்பத்துடன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து 21 நாட்களின் பின்னர், குறிப்பிட்ட 6 உள்ளூராட்சிசபை உறுப்பினர்களின் பதவிகளும் வறிதாவதாக தெரிவத்தாட்சி அலுவலரால் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவித்தலிற்கு எதிராக 6 உறுப்பினர்களும் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இது தொடர்பில் ஆராயந்த நீதிமன்றம், இந்த உத்தரவிற்கு எதிராக 14 நாட்கள் இடைக்கால தடைவிதித்தது. கடந்த சில வழக்கு தவணைகளில் ஒவ்வொரு 14 தினங்களிற்கும் தடையை நீடித்து வந்தது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை உறுப்புரிமை நீக்கத்திற்கு இடைக்கால தடைவிதித்தது.