யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபியை அடித்தழிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயில்களை வழிமறித்து தமிழ் மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை இராணுவம், பொலிசாரின் துப்பாக்கி முனை மிரட்டல்களின் மத்தியில் தமிழ் மக்கள் அங்கு குவிந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, மற்றும் உயிரிழந்தவர்களிற்கான பொதுவான நினைவுத்தூபி என்பனவே பாதுகாப்பு தரப்பினரால் அழிக்கப்படுகின்றன. ஒரு தூபி முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. மற்றைய தூபி அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தூபிகளை இரவிரவாக அழித்து, இடிபாடுகளை அகற்றிவிட பாதுகாப்பு தரப்பு மேற்கொள்ளும் முயற்சியை முறியடிக்க, தமிழர்கள் பல்கலைகழக வாயில்களை மறித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இரவிரவாக போராட்டத்தை தொடர திட்டமிட்டுள்ள தமிழர் தரப்பு, போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து தமிழ் மக்களிடமும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.