மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளைக் கடலில் நீராடியபோது இளைஞர் ஒருவர் காணமல் போன நிலையில் பெற்றோர், மற்றும் உறவினர்கள் அவரை தேடிவந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சனிக்கிழமை(09) காலை களுதாவளைக் கடற்கரையில் குறித்த இளைஞரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வியாழக்கிழமை(07) மதிய உணவருந்திவிட்டு தமது வீட்டிலிருந்து நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்ற களுதாவளை மத்தி பிரிவைச் சேர்ந்த 16 வயதுடைய கணேசன் பிதுர்னன் என்பவர் வியாழக்கிழமை இரவு வரைக்கும் வீடு வந்து சேரவில்லை இதனால், பெற்றோர் தமது பிள்ளையைத் தேடியலைந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை(08) காலை வரைக்கும் தனது பிள்ளை கிடைக்காதவிடத்து களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இவ்விடையம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட களுவாஞ்சிக்குடி பொலிசார் குறித்த இளைஞனுடன் மேலும் பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து களுதாவளைக் கடலில் வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் நீராடியுள்ளனர்.
இதன்போது தம்முடன் நீராடிய நண்பர் ஒருவர் கடலில், காணாமல்போயுள்ளதாக காணாமல்போன இளைஞனின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் காணாமல்போன இளைஞனைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில் களுவாஞ்சிக்குடி பொலிசார் இவ்விடயம் தொடர்பான விசாரணையை முன்னெடுத்திருந்த நிலையில் இன்று சனிக்கிழமை(09) காலை குறித்த இளைஞனின் சடலம் களுதாவளைக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.
இளைஞனின் மரணம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


















