யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று சற்றுமுன் அழைப்பு விடுத்துள்ளது.
நேற்றய தினம் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்து அழிக்கப்பட்டதை எதிர்த்து பல்கலைகழக வாயிலில் இராணுவ, பொலிஸ் அடக்குமுறைகளை தாண்டி போராட்டம் தொடர்ந்துவருகிறது.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆசியுடன் இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் இதனை எதிர்த்து பல்கலைக்கழக வாயிலில் கூடிய பல்கலைக்கழக மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகள் இரவு 9 மணி முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இரவிரவாக போராட்டம் தொடர்ந்த நிலையில், தற்போது வரை அப்போராட்டம் கைவிடப்படாமல் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் நேற்றிரவு பெருமளவில் ஆயுதம் தாங்கிய, கலகமடக்க தயாராக அதிரடிப் படையினர், பொலிஸார், இராணுவத்தனர் குவிந்து போராட்டக்காரர்களை சுற்றி நின்றனர்.
இன்றைய காலவேளையில் அதிரடிப்படை விலகியுள்ள நிலையில் பொலிஸார், இராணுவத்தனர் பெருமளவில் குவிகப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




















