மட்டக்களப்பில் கொரோனாவுக்கு அடுத்தடுத்து கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு அரசடி கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கோட்டமுனையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 16ஆம் திகதி 79 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், குறித்த ஆணின் மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக முடக்கப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்த ஆணின் மனைவி (71வயது) காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அத்துடன் அரசடி கிராம சேவையாளர் பிரிவில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் 22 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 531 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
மேலும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.