திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 1.57 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்தசம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குச்சவெளி, மதுரங்குடா – செந்தூர் பகுதியைச் சேர்ந்த எச்.நிரோஸன் (28 வயது) என தெரியவருகிறது.
NC-VF 1909 என்ற இலக்க மோட்டார்சைக்கிளில் கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் குச்சவெளி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரையோரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை அவரிடமிருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அவருடைய மோட்டார்சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.