கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய வாய்ப்பளிக்க முடியும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது விருப்பத்தையே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால் ஜனாதிபதி , பிரதமர், அமைச்சரவை என எவராலும் கொரோனா சடலங்கள் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்க முடியாது.
இது குறித்த முழுமையான அதிகாரமுடையவர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாவார் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொவிட் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்கள் தொடர்பான தொழிநுட்ப குழுவின் அறிக்கையைப் பெற்று அதிலுள்ள பரிந்துரைகளை உள்ளிடக்கி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் வரை தற்போதுள்ள விதிமுறைகளை மாற்றியமைக்க முடியாது என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை இணையவழியூடாக நடைபெற்றது.
இதன் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
கேள்வி : கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என்று பிரதமர் மஹிந்த ராஸஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறிவித்ததன் பின்னர் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் , பிரதமரின் கருத்து செல்லுபடியாகாது என்று கூறுகின்றார். இதன் மூலம் ஒரே விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் முரண்பட்ட நிலைப்பாடுகள் காணப்படுவது தெளிவாகிறதல்லவா?
பதில் : பிரதமர் அவரது நிலைப்பாட்டையே கூறினார். அடக்கம் செய்வதற்கு வாய்ப்பளிப்பதற்கு தனது விருப்பத்தையே அவர் கூறினார். எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி , பிரதமர் , அமைச்சரவை என எவராலும் கொரோனா சடலங்கள் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்க முடியாது.
இது குறித்த முழுமையான அதிகாரமுடையவர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாவார். தொழிநுட்ப குழுவின் அறிக்கையைப் பெற்று அதிலுள்ள பரிந்துரைகளை உள்ளிடக்கி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் வரை தற்போதுள்ள விதிமுறைகளை மாற்றியமைக்க முடியாது என்றார்.
கேள்வி : கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என்று அண்மையில் பேராசிரியரொருவரும் கூறியிருந்தார். அவ்வாறிருந்த போதிலும் அரசாங்கம் ஏன் இந்த விடயத்தில் தீர்வொன்றை வழங்குவதை காலம் தாழ்த்துகின்றது?
பதில் : இலங்கையில் வைரஸ் தொற்று காணப்படுவதாக சுகாதார அமைச்சரினால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதையடுத்து அதனுடன் தொடர்புடைய விவகாரங்களில் தீர்மானமெடுக்கும் அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு மாத்திரமே காணப்படுகிறது.
அவரால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பில் கடந்தாண்டு மார்ச் மாதம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதை மாற்றியமைப்பதற்கும் தொழிநுட்ப குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்க வேண்டும். அதனை விடுத்து மூன்றாம் தரப்பினருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இது தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க முடியாது.
கேள்வி : உருமாறிய புதிய வகை வைரஸ் தொடர்பில் கருத்து தெரிவிக்கப்படும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு வரும் உக்ரேன் சுற்றுலா பயணிகள் தம்முடன் வரும் 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்காமலிருப்பதற்கு அனுமதியளிக்குமாறு கோரியுள்ளதோடு , சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அதற்கு அனுமதியளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அவ்வாறெனில் சுற்றுலாப்பயணிகளுக்காக சுகாதார விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளனவா?
பதில் : சுற்றுலாப்பயணிகளுக்காக சுகாதார விதிமுறைகள் தளர்த்தப்படவில்லை. சுகாதார அமைச்சு அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கவில்லை.
கேள்வி : புதிய வகை வைரஸ் தொடர்பில் அச்சம் தோன்றியுள்ள நிலையில் நாடு முடக்கப்படுமா? இது தொடர்பில் அமைச்சரவையில் பேசப்பட்டதா?
பதில் : அவுஸ்திரேலியாவில் மெல்பெர்ன் நகரில் 13 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் நான்காவது முறையாக மீண்டும் அந்த நகரம் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் ஒரு தடவை மாத்திரம் முழு நாடும் முடக்கப்பட்டதால் இலட்சக்கணக்கானோர் தமக்கான வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளதோடு, பொருளாதாரமும் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டாலும் அதற்கான நடவடிக்கை எடுக்க முடியாது.
இலங்கையைப் போன்று கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள நாடொன்றுக்கு மீண்டும் நாட்டை முடக்குவதற்கான பொருளாதார பலம் இல்லை. எனவே அதனை செய்ய தேவை ஏற்பட்டாலும் அதற்கான வாய்ப்பு இல்லை. நாட்டை முடக்காமல் இந்த பிரச்சினைக்கு தீர்வினைக் காணவே அரசாங்கம் முயற்சிக்கிறது. கொரோனா வைரசுடன் வாழ்வதற்கு பழகிக் கொள்வதே தற்போது எம்முன் காணப்படும் சவாலாகும்.
கேள்வி : வெளிநாடுகளில் தடுப்பூசி ஏற்றப்பட்ட இலங்கையர் நாடு திரும்பும் போது அவர்களும் பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமா?
பதில் : வெளிநாடுகளில் தடுப்பூசி ஏற்றப்பட்டிருந்தாலும் இலங்கைக்கு வருபவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்காமலிருப்பதற்கு சுகாதார அமைச்சு எவ்வித தீர்மானத்தை எடுக்கவில்லை. இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் தினமும் ஒன்று கூடும் கொவிட் தடுப்பிற்கான ஜனாபதி செயலணியினால் தீர்மானிக்கப்படும்.