பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜே.வி.பியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா – பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என சம்பள நிர்ணய சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரம் ரூபா என்ற கோரிக்கை 6 வருடங்களுக்கு முன்னரே முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும்.
அதனை வலியுறுத்தி தொழிலாளர்களுடன் இணைந்து தாமும் போராடியதாக அவர் தெரிவித்தார்.
6 வருடங்களுக்கு முன்னர் இருந்த பொருளாதார நிலைக்கேற்பவே அந்த தொகை நிர்ணயிக்கப்பட்டது.
சம்பள நிர்ணயசபை ஊடாக சம்பளம் தீர்மானிக்கப்பட்டுள்ளதால், கூட்டு ஒப்பந்தம் ஊடாக கிடைக்கப்பெறும் சலுகைகள் கிடைக்கப்பெறுமா என்ற கேள்வியும் எழுகின்றது.
அவ்வாறு இல்லாது செய்யப்பட்டால் அவற்றை பெறுவதற்காக தாமும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஜே.வி.பியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.