சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை பரப்புரையாளராக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அனுஷா ரவியை, கமல்ஹாசன் நியமித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் அனைத்து கட்சிகளும், கூட்டணி பங்கீடு, தேர்தல் பரப்புரை போன்றவற்றில் தீவிரமாக இறங்கி வருகிறது.
அந்த வகையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இந்த தேர்தலில் போட்டிடுகிறது. அதற்கான வேலைகள் மும்பரமாக நடைபெற்று வருகிறது.
இந்த கட்சியில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேக ஆகியவை மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளன.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலையப் பரப்புரையாளராக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அனுஷா ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலையப் பரப்புரையாளராக டாக்டர் அனுஷா ரவியை நியமனம் செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வித் துறையிலும், தொழில் முனைவிலும் நெடிய அனுபவம் கொண்ட டாக்டர். அனுஷா ரவியின் வருகை கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் வழக்கம் போல சிறப்பான ஒத்துழைப்பை தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அனுஷா ரவி கோயமுத்தூர் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸில் பி.இ பட்டம் பெற்றார். அமெரிக்காவிலுள்ள ஓல்டு டொமினியன் பல்கலையில் மாஸ்டர் டிகிரியும் நெல்லை மனோன்மனியம் பல்கலையில் டாக்டர் பட்டமும் பெற்றவர்.
அமெரிக்காவில் ஏர்பஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான On Air நிறுவனத்தில் சீனியர் சிஸ்டம் இன்ஜீனியராக பணியாற்றியுள்ளார். இதற்கு முன்னதாக, Anheuser Busch நிறுவனத்தில் புரோஜக்ட் மேனஜராகவும் பணியாற்றியுள்ளார்.
அதன் பின் 2007-ஆம் ஆண்டு தாயகம் திரும்பிய அனுஷா ரவி, தந்தை நடத்தி வந்த பார்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அனுஷாவின் நிர்வாகத்திறமையால் தற்போது கோயமுத்தூர், திருப்பூர், சென்னை நகரங்களில் இன்ஜீனியரிங், ஏரோநாட்டிக்கல் சயின்ஸ், கலைக்கல்லூரிகள், நர்ஸிங் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி பள்ளி , இன்டர்நேஷனல் முதல் நர்சரி பள்ளிகள் பார்க் குழுமம் நடத்தி வருகிறது.
ஆண்டுக்கு 20,000 மாணவர்கள் பார்க் கல்வி நிறுவனங்களில் இருந்து படித்து வெளியே வருகின்றனர். இந்த நிறுவனங்களில் 1,500 பேர் பணி புரிகின்றனர்.
கோயமுத்தூரைப் பொறுத்த வரை அனுஷா ரவியின் முகம் நன்கு பரிச்சயம் என்பதால், கோயமுத்தூரில் சொல்லி கொள்ளும் அளவிற்கு மக்கள் நீதி மய்யம் வாக்கை பெறலாம் என்று நம்பப்படுகிறது.