நாட்டின் தற்போதைய அரசாங்கம் சிங்கள பௌத்த பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சிக்கு வந்த தேசப்பற்றுள்ள அரசாங்கம் எனக் கூறினாலும் அனைத்து நடவடிக்கைகளும், இந்தியா அல்லது ஜெனிவாவின் தேவை மற்றும் விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான மக்கள் விடுதலை முன்னணியின் யோசனைகளை கையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மிக விரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் இந்தியாவிடம் வாக்குறுதி வழங்கி இருப்பதால், விரைவில் அந்த தேர்தல் நடத்தப்படும்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய பல விடயங்கள் மற்றும் யோசனைகளை கையளித்துள்ளோம்.
மாகாணசபை முறைமை ஏற்படுத்தியமைக்கான நோக்கத்தையும் நிறைவேற்ற தவறியுள்ளதால், இதனால் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் மாகாணசபைகளை ஒழித்து விட்டு, அதனை விட வெற்றிகரமான, அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில், அரசியல் அதிகாரம் மற்றும் நிர்வாக அதிகாரத்தை உறுதிப்படுத்தும் புதிய கட்டமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும்.
மக்கள் பிரதிநிதியாக கடமையாற்றும் அனைத்து நபர்களும் இலங்கையின் குடியுரிமையை மாத்திரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
அதனை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.