திருகோணமலை சல்லி முனை, தொடுவாய் கிராமத்தை தொல்பொருள் பாரம்பரிய இடமாக அறிவித்து அங்கு செல்வதற்கு தடை விதித்தமைக்கு எதிராக அப்பகுதி மக்களினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட ஜாயநகர் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள சல்லி முனை, தொடுவாய் எனும் கிராமத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தினால் “பாரம்பரியங்களை நாசம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்” என குறிப்பிட்டு அங்கு செல்வதற்கு தடை விதித்து பெயர் பலகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பகுதி மக்களால் திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறி குறித்த பகுதியில் தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தொல்பொருள் சுவடுகள் காணப்படுவதாக தெரிவித்து கிழக்கு மாகாண ஆளுநரினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையானது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற கிழக்கு மாகாண ஆளுநர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டுக் கொண்டதோடு குறித்த விவசாயக் காணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் மக்களுக்கு பொருத்தமான காணிகளை விடுவித்து மக்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான இடங்களை ஒதுக்கி எஞ்சிய வனப்பகுதிகளை பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதாக கிழக்கு மகாண ஆளுநர் உறுதிளித்தார். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.