ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் காரசாரமாக அமைந்ததாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பிரச்சினைகளை நேரடியாக பேசி தீர்த்துக்கொள்ளுமாறு பசில் ராஜபக்ச, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் கூறியுள்ளார்.
அப்போது இருத்தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் இணைந்த கூட்டணியை சீர்குலைக்கும் நோக்கில் பசில் இந்த யோசனையை முன்வைத்திருக்கலாம் என சுதந்திரக் கட்சி கருதுவதாக கூறப்படுகிறது.
பசில் ராஜபக்சவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இப்படியான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகள் இன்றி முடிவடைந்ததாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் ஏனைய 12 கட்சிகளை கொண்ட அணியில் முக்கிய கட்சியாக செயற்பட்டு வருகிறது.
இந்த அணியை சேர்ந்த கட்சித் தலைவர்களான விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, திஸ்ஸ வித்தாரண ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அந்த கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.