பிரித்தானியாவில் பெண் ஒருவர் தான் பெற்ற குழந்தையை தானே கடத்தியுள்ள நிலையில், பொலிசார் அவரைக் கைது செய்யும் சூழல் உருவாகியது. பர்மிங்காமிலுள்ள Heartlands மருத்துவமனையில் ஏழு வாரக் குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 8.30 மணியளவில் திடீரென குழந்தை மாயமாக, அதன் தாயும் காணாமல் போயிருந்தார்.
அந்தக் குழந்தை, அரசின் பாதுகாப்பு அமைப்பின் பொறுப்பில் உள்ள குழந்தை என்பதால், அது குழந்தை கடத்தலாக கருதப்பட்டு பொலிசார் அந்த குழந்தையையும் அதன் தாயையும் தீவிரமாக தேடும் முயற்சியில் இறங்கினர்.
இரவு 8.30 மணியளவில் பொலிசார் தாயையும் சேயையும் Sparkhill என்ற இடத்திலுள்ள கட்டிடம் ஒன்றில் கண்டுபிடித்தனர்.
அந்த 43 வயது பெண், குழந்தையைக் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக, இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். Neil Hunt என்னும் பொலிசார் கூறும்போது, குழந்தை பாதுகாப்பாக இருக்கிறாள், ஆனால், அந்த குழந்தையின் தாயை கைது செய்யவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டதுதான் சோகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.