இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் டெல்டா மாறுபாட்டுடன் தொடர்புடையதாக நம்பும் புதிய அறிகுறிகளை அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தியாவில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்படும் நோயாளிகளில் தற்போது குடலிறக்கம் மற்றும் காது கேளாமை அறிகுறிகள் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த மருத்துவர் Abdul Ghafur இது தொடர்பில் தெரிவிக்கையில், புதிய மாறுபாடு தொடர்ந்து வெளிப்பட்டு வருவதால், கொரோனா பெருந்தொற்றை கணிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொற்றுநோயின் முதல் அலையுடன் ஒப்பிடும்போது வயிற்றுப்போக்கு அறிகுறிகளுடன் நோயாளிகளை தற்போது அதிகம் காண நேர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, வயிற்று வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை, காது கேளாமை மற்றும் மூட்டு வலி போன்ற பொதுவான அறிகுறிகளைக் கவனித்துள்ளதாக நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஆறு முன்னணி மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரித்தானியாவிலும் முக்கியமான சில பகுதிகளில் டெல்டா மாறுபாட்டால் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது.
கிரேட்டர் மான்செஸ்டர் மற்றும் லங்காஷயரின் சில பகுதிகளில் உள்ள மக்கள் அதிகரித்து வரும் தொற்றுநோய் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் பகுதியை விட்டு வெளியேற வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டனர்.
இதனிடையே, டெல்டா மாறுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கமாகக் கொண்ட புதிய நடவடிக்கைகளை போரிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாதிப்பு மிகுந்த பகுதிகளில் மக்கள் சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், தேவைக்கு மட்டும் பயணம் மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.