கொழும்பு மாநகர சபை அதிகார பிரதேசத்தில் அஸ்ட்ரா செனிகா இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளைமுதல் மேற்கொள்ளப்படும் என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கொழும்பு மாநகரசபையின் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் வைத்தியர் தினுகா குருகே தெரிவிக்கையில்,
கொழும்பு மாநகர அதிகார பிரதேசத்தில் அஸ்ட்ரா செனிகா முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட, 70வயதுக்கு மேற்பட்டவர்கள், 10ஆயிரத்து 500பேர் வரை இருக்கின்றார்கள். இவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை 2 மத்திய நிலையங்களில் மேற்கொ்ளள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
அதன் பிரகாரம் வடகொழும்பு மற்றும் மத்திய கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு சுகததாச மைதான வெளியரங்கிலும் பொரளை, கொழும்பு மேற்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிருளப்பனை முகலன் வீதியில் சிதுமினி சனசமூக நிலையத்திலும் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
கொழும்பு மாநகர சபையில் தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையங்களில் இந்த தடுப்பூசியின் முதலாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு, அவர்கள் வழங்கிய தொலைபேசி இலக்கங்களுக்கு covid vaccine என்ற பெயரில் வழங்கப்படும் குறுந்தகவல் ஊடாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வரவேண்டிய திகதி, நேரம் மற்றும் இடம் தெரிவிக்கப்படும்.
அத்துடன் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வரும்போது, குறித்த குறுந்தகவல் அடங்கிய கையடக்க தொலைபேசியுடன் தடுப்பூசி ஏற்றும் பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டையை எடுத்துவருவது கட்டாயமாகும்.
அத்துடன் முதலாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும்போது கையடக்க தொலைபேசி இலக்கம் ஒன்றை வழங்காமல், வீட்டில் நிலையாக இருக்கும் தொலைபேசி இலக்கம் வழங்கியவர்கள், பிரதேசத்தின் சுகாதார பரிசோதகரிடம் இதுதொடர்பாக அறிவுறுத்தி, இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.