முக்கிய பொறுப்பிலிருந்து அமைச்சர் உதய கம்மன்பில இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகிறது.
எரிவாயு விலையை தீர்மானிப்பது தொடர்பான அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர் பதவியையே வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கடந்த வாரம் இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணிகளை கருத்திற்கொண்டு இந்த இராஜினாமா மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எரிவாயு விலையை அதிகரிக்குமாறு எரிவாயு உற்பத்தி நிறுவனங்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, மஹிந்த அமரவீர மற்றும் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோரை உள்ளடக்கிய அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது.
எரிவாயு விலையேற்றம் குறித்து எரிவாயு நிறுவனத்தினர் முன்வைத்த யோசனைகள் மற்றும் கோரிக்கைகளை இந்த குழு ஆராய்ந்ததன் அடிப்படையில் எரிவாயு விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் கிடையாது என கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் அமைச்சர் உதய கம்மன்பில குறித்த குழுவிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.