அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டைவிட்டு வெளியே வாருங்கள், தேவையற்று வெளியில் நடமாடவேண்டாம் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.
சமகால கொரோனா நிலமைகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
நாட்டில் தற்போது கொரோனா தொற்று பரவலானது அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது அதிலும் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கடந்த சில வாரங்களாக நோய் அறிகுறிகளுடன் தொற்றாளர்கள் இனங்கான படுகின்றார்கள்.
இது ஒரு ஆபத்தான விடயம் எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவை தவிர்ந்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு, சுகாதாரத் திணைக்களம் என்பன பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளன.
அத்துடன் வடக்கு மாகாணத்தில் உள்ள ஒன்பது கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களும் நிரம்பிக் காணப்படுவதுடன், கொரோனா நோயாளர்களை பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட வைத்தியசாலை விடுதிகளும் நிரம்பிக் காணப்படுகின்றன.
யாழ்.மாவட்டத்தை பொறுத்தவரை ஒன்று கூடல்கள் அதாவது இந்து ஆலயங்களில் நடாத்தப்பட்ட நிகழ்வுகளின் காரணமாக பல தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே எதிர்வரும் காலத்தில் இவ்வாறான ஒன்று கூடல்கள் மற்றும் நிகழ்வுகளை தவிர்த்து பொதுமக்கள் வீடுகளில் இருத்தல் சிறந்தது.
அதேபோல மேல் மாகாணத்தில் தற்போது இறப்பு வீதம் அதிகரித்துள்ளது. அதே நிலைமை வட மாகாணத்திலும் இனி வருங்காலத்தில் ஏற்படலாம். எனவே பொதுமக்கள் கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுதல் மிகவும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் மேல் மாகாணத்தில் வீடுகளில் கொரோனா நோயாளர்களை வைத்து பராமரிக்கும் செயற்திட்டம் பரீட்சார்த்தமாக செயல்படுத்தப்படுகின்ற நிலையில் அந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால் ஏனைய மாகாணங்களுக்கும் அந்த திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.