யாழ்ப்பாணம் அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்ற பொலிஸார், திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களை அங்கிருந்து செல்ல பணித்தனர்.
மிருசுவிலை சேர்ந்த மணமகனுக்கும், அச்சுவேலியை சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் எந்தவொரு சுகாதார நடைமுறைகளையும் மதிக்காமல் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் , மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொரோனா தொற்று பரிசோதனையை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் அவர்களுடன், நெருக்கமான உறவினர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனையை முன்னெடுக்க சுகாதார மருத்துவ அதிகாரியிடம் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை , சுகாதார கட்டுப்பாடுகளை மீறி திருமண வைபவத்தை ஒழுங்கு செய்தவர்கள் மீது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி நீதிமன்றில் முற்படுமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் அச்சுவேலி பொலிஸார் கூறியுள்ளனர்.