21ம் திகதிக்கு பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என தான் கருதவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்பாடசாலைகள் யாவும் விரைவில் ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சீதுவ பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறிள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“சிறு குழந்தைகளுக்கு பல்வேறு வகையான தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன. பெற்றோர்கள் உரிய காலத்தில் தமது குழந்தைகளுக்கு அவற்றை ஏற்றுகின்றனர். ஆனால் பெரியவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் போதே பல்வேறு பொய் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன .
கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை. பாடசாலையை ஆரம்பிக்க வேண்டும் என்றால் வீட்டில் உள்ள பெரியவர்கள் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேணடும்.
12 வயதுக்கு மேற்பட்ட அல்லது 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றுவது தொடர்பாக விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்பாடசாலைகள் யாவும் விரைவில் ஆரம்பிக்கப்படவேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.