தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று, மூன்று மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. நவம்பர் 1-ந்தேதியில் இருந்து பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்தது. கடந்த சனிக்கிழமை இரவு சென்னையில் அதி கனமழை பெய்தது. இதனால் சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்னும் சில இடங்களில் வெள்ளம் சூழ்ந்த வண்ணம் உள்ளது.
இதற்கிடையில் தற்போதும் லேசான மழை பெய்து கொண்டு இருக்கிறது. இன்றைய தினத்தில் இருந்து நாளை மறுதினம் வரை, அதாவது நவம்பர் 9-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை ஒன்றிரண்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக வானிலை மைய அதிகாரி எஸ். பாலச்சந்திரன் ‘‘இன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாளை கடலூர், விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம், காரைக்கால் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11-ந்தேதி திருவள்ளுர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று சில இடங்களில் கனமழை பெய்யும். நாளை மிக கனமழை பெய்யும். அதற்கு அடுத்த நாள் அதி கனமழை பெய்யும். தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை, இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் மீனவர்கள் இன்று முதல் 11-ந்தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.



















