2022ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் காரணமாக எதிர்காலத்தில் பொருட்களின் விலை மேலும் உயரும், அதனைத் தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முழுமையாக தோல்வியடைந்த ஒன்று. இந்த வரவு செலவுத் திட்டத்தின் வருமானத்தை அதிகமாகக் காட்டி செலவினத்தைக் குறைத்துக் காட்டும் செயற்பாடே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள வரிகள் எதுவுமே வருமானத்தைக் கொண்டு வரப் போவதில்லை . 2019இல் ஜனாதிபதி பதவிக்கு வந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இன்று 70 வீதம் வரை அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது.
நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. நாடு அரிசி இன்று 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது 90 ரூபாவாக நாடு அரிசி விற்பனை செய்யப்பட்டது. சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனினும் 2019இல் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது சம்பா அரிசி 97 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. செத்தல் மிளகாய் அன்று 400 ரூபா என்றும் இன்று 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பருப்பு இன்று 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் 2022ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் காரணமாக எதிர்காலத்தில் பொருட்களின் விலை மேலும் உயரும் என குறிப்பிட்டுள்ளார்.