யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
குறித்த பகுதி பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணிக்கு இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இதன் போது எமது உயிருக்கு யார் உத்தரவாதம், நாம் ஆரோக்கியமான சந்ததியாய் வாழ வழிவிடு,தரமற்ற எரிவாயுக் கசிவால் ஏற்படும் ஆபத்துக்கு யார் பொறுப்பு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
ஜே / 81 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மக்கள் ஸ்ரீ மீனாட்சி சனசமூக நிலையம் ஊடாக குறித்த களஞ்சிய சாலை மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு உள்ளதாகவும், களஞ்சிய சாலைக்கு முன்பாக கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும், குறிப்பாக அருகில் உள்ள பாடசாலைக்கு நடந்து செல்லும் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டு, உடனடியாக அங்கிருந்து குறித்த களஞ்சியசாலையை அகற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.