அரசியல் அமைப்பில் மாற்றங்களையோ திருத்தங்களையோ கொண்டு வரும்போது மிகவும் தெளிவாக ஆராய்ந்து கொண்டுவரப்பட வேண்டும் என யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன் தெரிவித்துள்ளார்.
யாழில் “நாட்டின் புதிய ஆட்சி மலர்வதற்கான மக்களின் பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசிய பட்டியல் ஆசனம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதனூடாக யார் வரலாம் என கூறப்படா விட்டாலும் அதன் நோக்கம் கல்வியலாளர்கள் ஆளுமை மிக்கவர்களை அரசியல் நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் தற்போது நாட்டினுடைய பிரதமரான ரணில் விக்ரமசிங்க எவ்வாறு தேசிய பட்டியல் ஆசனம் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வந்தார் என்ற கேள்விகளுக்கு அப்பால் எவ்வாறு பிரதமர் ஆனார் என்ற கேள்வியும் எழுகின்றது.
துரதிஷ்டவசமாக இலங்கையில் உள்ள எந்தவொரு நீதிமன்றமும் தேர்தலில் தோற்றவர்கள் தேசியப் பட்டியலூடாகப் நாடாளுமன்றம் செல்வதை அரசியலமைப்புக்கு முரண் என எச்சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.
இலங்கை அரசியல் அமைப்பு தொடர்பில் சில விடயங்களை பொருள்கோடல் மூலம் உணர்த்துவதற்கு நீதிமன்றங்கள் முனைந்தாலும் அவ்வளவு தூரம் நீதிமன்றங்களுக்கு சுயாதீனம் இருக்கவில்லை.
இவற்றிற்கெல்லாம் 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பு பிரதான காரணமாக இருப்பதோடு அதன் ஊடாக கொண்டு வரப்பட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும்.
இலங்கையில் காணப்படுகின்ற நிறைவேற்ற ஜனாதிபதி அரசினுடைய தலைவர் அரசாங்கத்தினுடைய தலைவர் முப்படைகளில் உடைய தலைவர் அமைச்சரவை உடைய தலைவர் என எல்லையற்ற அதிகாரம் உள்ள ஒரு ஜனாதிபதியாக காணப்படுகிறார்.
அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தல் யுத்தத்தை பிரகடனம் செய்தல் ஆகியவற்றிற்கு யாரையும் கலந்து ஆலோசிக்காமல் ஜனாதிபதியே முடிவெடுக்க கூடிய அதிகாரத்தை 78ஆம் ஆண்டு அரசியலமைப்பு வழங்கியுள்ளது.
எனினும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தின் அனுமதி தேவையாக இருந்தாலும் பிறப்பிக்கும் போது யாரையும் கேட்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு இல்லை.
அது மட்டுமல்லாது நீதித்துறையின் சுயாதீனத் தன்மையே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தலையீடு செய்வதன் மூலம் நீதிமன்ற சுவாதீனம் இல்லாமல் போகிறது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் நியமனம் மற்றும் நீதிமன்றத்தால் குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்ட ஒருவரை பொது மன்னிப்பின் மூலம் ஜனாதிபதி விடுவிப்பதும் நீதிமன்ற சுயாதீனத்தை சவாலுக்கு உட்படுத்துகிறது.
78ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் சட்டவாக்கத் துறையான நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றுத்துறையின் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது.
19வது திருத்தச் சட்டத்தின் மூலம் நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் காலம் நாலரை வருடங்களாக கொண்டுவரப்பட்டாலும் 20 ஆவது திருத்தத்தின் மூலம் இரண்டரை வருடங்களாகக் குறைக்கப்பட்டது.
மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற நாடாளமன்றத்தை நிறைவேற்று ஜனாதிபதி கலைப்பது எமது அரசியல் யாப்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதியால் முடியுமே தவிர அவரைப் பதவி நீக்குவதற்கு முடியாது.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கிய போது நீதிமன்றம் தலையீடு செய்து அதனை பிழையென தீர்ப்பு கூறியமை அனைவரும் அறிந்ததே.
1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை கொண்டு வந்தபோது சில நியாயப் பாடுகளை கூறினாலும் காலப்போக்கில் அதனை நீக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.
19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது முற்றுமுழுதாக நிறைவேறு ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப்பட வேண்டுமென்று கோரினாலும் சில அதிகாரங்களை குறைக்க முடிந்தது.
மீண்டும் 20ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 21ஆம் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்குவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இங்குதான் நாம் கவனத்தைச் செலுத்தவண்டும் ஜனாதிபதியின் அதிகாரத்தை 21 திருத்தம் மூலம் பிரதமரை சர்வ வல்லமை பொருந்திய பிரதமராக மாற்ற கூடாது.
அகவே அரசியல் அமைப்பில் மாற்றங்களையோ திருத்தங்களையோ கொண்டு வரும்போது மிகவும் தெளிவாக ஆராய்ந்து கொண்டுவரப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.