கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு திடீர் விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதுடன் அவர்களுடன் செல்பியும் எடுத்துக்கொண்டமை அங்கிருந்த இளையோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட அரிய மற்றும் வரலாற்றுப் பெறுமதி மிக்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட விசேட புத்தகக் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற 23 ஆவது கொழும்பு தேசிய புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர நினைவேந்தல் புத்தகக் கண்காட்சி
இதன்போது சுதந்திர நினைவேந்தல் புத்தகக் கண்காட்சிக்கு இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தின் ஆதரவைப் பெறுவோம் என நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று காலை கண்காட்சி மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்தா இந்திவேரா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்த வருட புத்தகக் கண்காட்சியில் 400இற்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு புத்தக வெளியீட்டாளர்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளதுடன், அரங்குகளுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவற்றை பார்வையிட்டதுடன், புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் குறித்தும் கேட்டறிந்து சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.



















